1. அர்ப்பணிப்பு உணர்வுடன்,
வாழ்வை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட்டால் கவலைக்கு வழியில்லை. அவருடைய கருணை, எப்போதும்
நம்மைக் காத்துக் கொண்டிருக்கும்.
2. மிருகங்களைப் போல, கீழான
உணர்ச்சிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருந்தால் வாழ்வு வீணாகிவிடும். மனிதப்பிறவி
மகத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. மனதில் எப்போதும் அமைதி நிறைந்திருக்க
வேண்டும். அது ஒன்றே மிகப் பெரிய செல்வம்.
4. இன்பமோ, துன்பமோ இரண்டும்
புறப்பொருள்களைச் சார்ந்தவை அல்ல. ஒருவரின் மனதைப் பொறுத்தே உண்டாகின்றன.
5. வாழ்க்கையில் பிரச்னைகளை
யாராலும் தவிர்க்க முடியாது. அவற்றை சவாலாக ஏற்று சமாளித்து, வாழ்க்கையைத் திறம்பட
நடத்துவதைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
6. நூறு நன்மை செய்திருந்தும்,
ஒரு தீமை செய்து விட்டால் கூட, உலகம் உங்களைப் புறக்கணித்து விடும். நூறு தீமை செய்தவனும்
வாழ்வில் ஒரு நன்மை செய்ய விரும்பினால் கூட கடவுள் அவனை ஏற்றுக் கொள்வார்.
7. தேர்வில் வெற்றி பெறவும்,
வேலை வாய்ப்பு கிடைக்கவும் எவ்வளவோ கஷ்டப்பட தயாராக இருக்கிறோம். ஆனால், அழியாத ஆனந்தம்
தரும் கடவுளுக்காக நாம் ஒரு நிமிடம் கூட செலவழிக்கத் தயாராக இல்லை.
8. சூரிய உதயத்திற்குப் பின்
தூங்கும் வழக்கம் நல்லதல்ல. இன்னும் சொல்லப் போனால், குடும்பத்தினர் அனைவரும் அதிகாலை
ஐந்து மணிக்கே எழுந்துவிட பழக வேண்டும்.
9. தினமும் இரண்டு மணிநேரம்
மவுனமாக இருப்பது நல்லது. முடிந்தால் வாரத்தில் ஒருநாள் மவுனவிரதம் மேற்கொள்ளுங்கள்.
10. நம் உள்ளம் கோயில். அங்கிருக்கும்
கடவுளுக்கு நல்ல எண்ணமே அர்ச்சனை மலர்கள். நல்ல சொல்லே பாமாலை. அன்பே அவர் விரும்பும்
நைவேத்யம்.
11. கோபம் வரும்போது நம் உடலின்
ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் ஆற்றல் வெளியேறுகிறது.
12. பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து
நடப்பது நம் பலவீனம் அல்ல. அடக்கமும்,பணிவும்மனிதனை நன்னெறிப்படுத்தும் பண்புகள்.
13. தேவைகளைக் குறைத்துக் கொண்டு,
அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கும், தர்மபணிகளுக்கும் செலவிட வேண்டும்.
14. பிச்சைக்காரர்களுக்கு பணம்
கொடுக்கக் கூடாது. உணவாகவோ, உடையாகவோ கொடுக்கலாம்.
15. பெண்கள் சமையலில் ஈடுபடும்போது
நல்ல சிந்தனைகளுக்கு மட்டுமே இடம் தர வேண்டும். சமைத்தவர்களின் இயல்பு அதை உண்பவர்களுக்கும்
பரவும் என்பதை மறத்தல் கூடாது.
16. காலையும், இரவும் மிதமான
உணவும், மதியம் தேவையான அளவும் உண்பது நல்லது. வயிறு நிரம்ப சாப்பிடுவது மந்தபுத்தியை
உண்டாக்கும்.
17.
இன்று இல்லாவிட்டாலும், நாளையாவது பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.
ஆனால், குணம் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது. அதில் ஒருபோதும் குறைபாடு நேர்ந்து
விடக் கூடாது.
No comments:
Post a Comment