சிறிய நீர்ப் பெருக்கு போகப்
போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.
இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக
இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும்
இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு
நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன.
அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி
விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
வழியில் நிச்சயமாகத் தடைகள்
இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று
நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி
வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும்
என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.
பல இடங்களில் அதன் வழி கரடு
முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில்
மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை.
அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே,
சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.
தான் செல்கின்ற இடம் எல்லாம்
செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது
தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும்
நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை.
வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.
நீங்கள் நதியைப் போல் இருங்கள். உங்கள் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து
விடாதிர்கள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறுங்கள். வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பீர்கள். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதிர்கள், தொடர்ந்து சிறந்து செயல் படுங்கள். தடைகள் வரத்தான் செய்யும்.
தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதிர்கள். பயனில்லை.
தொடர்ந்து முன்னேறுங்கள். பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதிர்கள். உங்கள் பயணத்தைப் பாதைகள்
தீர்மானிக்க விட்டு விடாதிர்கள். சில சௌகரியமான நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதிர்கள். அவற்றையும் மீறி
முன்னேறும் போது தான் நீங்கள் சரித்திரம் படைக்க முடியும். உங்கள் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதிர்கள்.
வாழ்க்கைப் பயணம் சிறப்பாக
இருந்தால் நீங்கள் சந்திப்பவர்கள் எல்லாம்
உங்களால் பயன் பெறுவர். பலர் சிறக்க நீங்கள் காரணமாவிர்கள் .
கஷ்டங்களும்,சங்கடங்களும்
நம்மிடம் யாரும் கையில் கொடுபதில்லை,அவைகள் நாம் அறிந்தும்,அறியாமலும் செய்யும்
தவறுகளால் ஏற்படுகின்றன. அந்த தவறுகளை ஏற்று கொள்ளும்
மனபக்குவம் நமக்கு இருந்தால் போதும். வாழ்க்கைப் பயணம்
சிறப்பாக அமையும்.
நதியிடம் இருந்து இந்த மகத்தான
ரகசியத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment